HomeUncategorizedபுலிப்பாணி ஜாலத்திரட்டு 161 - 165 of 211 பாடல்கள்

புலிப்பாணி ஜாலத்திரட்டு 161 – 165 of 211 பாடல்கள்

புலிப்பாணி ஜாலத்திரட்டு 161 – 165 of 211 பாடல்கள் 
 

சீலை  மெழுகு  பாவை

161. தானென்ற  சிவன்காளி  கணபதி  கந்தன்
    தயவான  வயிரவனும்  பெருமாள்  ஐயன்
கோனென்ற  வனுமனொடு  கறுப்ப  னப்பா
    கொற்றவனே  யவர்கள்  மெழுக்  கெடுத்துக்  கொண்டு
தேனென்ற  வகைவகைக்கு  விராக  னொன்று
    தெளிவாக  மெழுகுபதி  னெண்  விராகன்
வாவென்ற  ஐங்கோல  னைங்காயஞ்  சேர்த்து
    வளமான  சுடலையுட  கருவுங்  கூட்டே.

விளக்கவுரை :

சீலை  மெழுகு  பாவை  வித்தையைப்  பற்றி  கூறுகிறேன்  கேள்.  சிவபெருமான் , காளிகாதேவி , விநாயகர் , ஷண்முகன் , வயிரவன் , பெருமாள் , அய்யன் , அனுமான் , கருப்பன்  ஆகிய  தெய்வ  அபிஷேக  வழிபாட்டில்  உண்டாகும்  மெழுகை  வகைக்கு  இரண்டு  விராகன்  வீதம்  எடுத்துக்  கொண்டால்  பதினெட்டு  விராகன்  எடையாகும்.  இதில்  ஐங்கோலம் , ஐங்காயம் , சுடலையின்  கருவையும்  சேர்த்துக்  கொள்ளவும்.

162. கூட்டியே  லேகித்து  உருப்போற்  செய்து
    கொற்றவனே  மயானருத்திரன்  றியானமோது
நாட்டிடே  யம் … பம் … யம் … பம் … மென்று
    நலமான  மயானருத்திரா  கட்டுகட்டு
சூட்டியே  எரி … எரி … யென்று  லட்சஞ்
    சுகமாகத்  தானோதிப்  பூசை  செய்து
ஆட்டியே  சத்துருப்பே  ரெழுதி  வைத்து
    அப்பனே  யுரு  வயிற்றிற்  பதித்துப்  போடே.

விளக்கவுரை :

சேர்த்துக்  கொண்டதை  நன்றாக  லேகியம்போன்று  பிசைந்து,  இவற்றில்  ஒரு  உருவம்  செய்து  கொண்டு,  மயானருத்திரன்  மந்திரம்  சொல்லவும்  ” யம் … பம் … யம் … பம்”  என்றும்  ” மயான  ருத்திரா  கட்டு … கட்டு …”  என்றும்      ” எரி … எரி …”  என்றும்  இலட்சம்  தடவைகள்  ஒதிவிட்டு  பூசை  செய்யவும்.  அதன்  பின்னர்  எதிரியின்  பெயரை  ஒரு  சீட்டில்  எழுதி  செய்துள்ள  உருவத்தின்  வயிற்றில்  பதிக்கவும்.

163. பதித்துநீ  யாயிரத்  தெட்டுரு  ஜெபித்துப்
    பண்பான  பூசையது  பாங்காய்ச்  செய்து
அதித்துநீ  முப்பத்து  ரெண்டு  குப்பி
    அப்பனே  முடக்கிவைக்க  முடமதாவான்
கதித்தவுட  நூசியிலே  குத்தும்போது
    கனிவான  விரல்நகங்கள்  காதிற்  குத்தும்
நசித்தவுட  லூசியது  சொரிகி  வைக்க
    நாயகனே  குத்தலெடுத்  தலறுவானே.

விளக்கவுரை :

பதித்து  வைத்த  உருவத்தின்முன்  ஆயிரத்து  எட்டு  தடவைகள்  ஜெபித்து  விட்டு  பக்தியுடன்  பூசை  செய்யவும்.  பின்னர்  அதனை  முப்பத்திரண்டு  குப்பியில்  முடக்கி  வைத்தால்  எதிரி  முடமாவான்.  இந்த  உருவத்தில்  ஊசியை  விரல் , நகம் , காது  இவைகளில்  குத்தி  சொருகி  வைத்தால்  எதிரியானவன்  குத்தலெடுத்து  அலறுவான்.

164. அலறியே  யவன்  வணங்கி  வந்தானானால்
    அப்பனே  முடந்திருப்ப  வூசி  வாங்கு
நலமாக  வயிற்றில்  வைத்தசீட்டு  போக்கு
    நாயகனே  நிவர்த்தியாய்ப்  போகும்  பாரு
குலமான  பாவையைநீ  பதனம்  பண்ணு
    கொற்றவனே  நினைத்தபோ  தெடுத்துச்  செய்நீ
பலமாக  யிப்பாவை  கையில்  வேணும்
    பார்த்தவர்க்குப்  பலனுண்டு  பலவிதமாமே. 

விளக்கவுரை :

இந்த  கொடுமையைத்  தாங்காத  எதிரி  பணிந்து  வணங்கி  வந்ததனனால்  உருவத்தின்  வயிற்றில்  பதித்து  வைத்துள்ள  சீட்டு , குத்தியுள்ள  ஊசி ஆகியவற்றை  எடுத்து  விட்டால்  அவனுக்கு  நிவர்த்தியாகி  நலமாவான்.  அதன்  பின்னர்  அந்த  பாவையை  பத்திரமாக  எடுத்து  வைத்துக்  கொள்ளவும்.  தேவைப்  படும்போது  இதனை  எடுத்து  உபயோகித்தால்  பலவிதமான   பலன்  கிடைக்கும்.

165. ஆமப்பா  ஐயுங் … கிலியுங் …சுவாகா … வென்று
    அடைவாக  லட்சமுரு  ஜெபித்துப்  பாரு
நாமப்பா  பூஜையது  சத்தி  பூஜை
    நாள்தோறு  மண்டலந்தான்  தினமுஞ்  செய்நீ
வமப்பா  மண்டலத்திற்  சித்தியாகும்
    வளமாக  வேணுமென்ற  தெதுவானாலும்
போமப்பா  நீசொல்லித்  தியானஞ்  செய்யப்
    போகுமே  யவரிடத்திற்  கிணவிற்றானே.

விளக்கவுரை :

“ஐயும் … கிலியும் … சுவாஹா … ”  என்று  இலட்சம்  தடவைகள்  ஜெபித்து  நாற்பத்தெட்டு  நாட்கள்  தினசரி  சக்தி  பூஜை  செய்தால்  நினைத்த  காரியங்கள்  கைகூடி  சித்தியாகும்  எது  தேவையோ  அதனை  நினைத்து  தியானம்  செய்தால்  அவையாவும்  உனக்குக்  கிடைக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments