அகிலத்திரட்டு அம்மானை 331 – 360 of 16200 அடிகள்
கணவன் மொழியக் கலவுமொழி பேசாத
துணைவி நிலைமை சொல்லுவே னம்மானை
கற்கதவு போலே கற்பு மனக்கதவு
தொற்கதவு ஞானத் திருவுகோ லவள்மனது
அன்பாகப் பெற்ற அன்னை பிதாவதுக்கும்
முன்பான சோதி முறைபோ லுறவாடிப்
போற்றியே நித்தம் பூசித் தவள்மனதில்
சாற்றிய சொல்லைத் தவறா மலேமொழிவாள்
அரசன் துயில ஆராட்டி ஓராட்டிக்
கரமா னதுதடவிக் கால்தடவி நின்றிடுவாள்
துயின்ற தறிந்து துஞ்சுவாள் மங்கையரும்
மயன்ற ஒருசாமம் மங்கை யெழுந்திருந்து
முகத்து நீரிட்டு நான்முகத்தோ னையுந்தொழுது
அகத்துத் தெருமுற்றம் அலங்கார மாய்ப்பெருக்கிப்
பகுத்துவ மாகப் பாரிப்பார் பெண்ணார்கள்
தவத்துக் கரிய தையல்நல்லார் தங்களுட
மனுநீதஞ் சொல்லி வகுக்க முடியாது
கனியான பெண்கள் கற்புநிலை மாறாமல்
இனிதாக நாளும் இருக்குமந்த நாளையிலே
வனியான சாதி வளமைகே ளம்மானை
சாதி வளமை
சான்றோர் முதலாய்ச் சக்கிலி யன்வரையும்
உண்டான சாதி ஒக்கவொரு இனம்போல்
தங்கள்தங்கள் நிலைமை தப்பிமிகப் போகாமல்
திங்கள் மும்மாரி சிறந்தோங்கி யேவாழ்ந்தார்
செல்வம் பெருக சிவநிலைமை மாறாமல்
அலுவல் தினஞ்செய்து அன்புற் றிருந்தனராம்
தான்பெரி தென்று தப்புமிகச் செய்யாமல்
வான்பெரி தென்று மகிழ்ந்திருந்தா ரம்மானை
ஒருவர்க் கொருவர் ஊழியங்கள் செய்யாமல்
கருதல் சிவன்பேரில் கருத்தா யிருந்தனராம்
விளக்கவுரை :




